சென்னை,நவ.4- வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலையால் கடந்த வாரம் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெற்றது. ‘மகா’ புயல் என்று இதற்கு பெயர் சூட்டப்பட்டது. இந்த புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளது. குஜராத் ஹவலில் இருந்து 620 கி.மீ. தொலைவில் மேற்கு-தென்மேற்கு திசையில் அது நிலை கொண்டுள்ளது. நவ.5 அன்று காலை அது மேலும் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது. இந்த அதி தீவிர புயல் குஜராத் டையூக்கும் போர் பந்தலுக்கும் இடையே 6 ஆம் தேதி இரவு அல்லது 7 ஆம் தேதி மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்க ப்படுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலால் தமிழகத்திற்கு மழையோ புயல் பாதிப்போ இருக்காது.
இந்த நிலையில் இன்று காலை அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்ற ழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக வும் இது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இரண்டு அல்லது 4 நாட்களில் மத்திய கிழக்கு கடலில் காற்றழுத்த மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார். தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக இன்றும், நாளையும் அந்தமான் கடல் பகுதிகளில் 6, 7, 8 ஆம் தேதிகளில் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறை காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.